முகப்பு...

Wednesday 18 April 2012

விரும்புகிறேன்....!!

என்னவனே...
உள்ளத்து உணர்வுகளை
உணர்த்த வார்த்தையற்ற எனை
ஐயிரண்டு விரல்களால்
ஆரத்தழுவி..
என்னிதயத் துடிப்பை
உன்னிதயத்தால் உணர்ந்துகொள்...

துவண்ட உள்ளம்
உன் தோள் சாய..

கன்னம் வருடி
கண்களை இளைப்பாற்றி
மூச்சு தகிக்க
நீ இடும் ஒற்றை முத்தம்
மின்சாரமாய் என்னுடலில் பாய்ந்து தகிக்க
என் மடிமீது உன்தலைசாய்த்து..
என் விரலுக்கு சொடுக்கெடுக்க..
நானும்
உன் தலைகோதி....
உறங்கா உனை உறங்கவைத்து...

வறண்ட உன்னிதழை
என்னிதழால் ஈரப்படுத்தி...
தளர்ந்த உன்னுணர்வை
உயிர்ப்பூட்டி...
என்னிடத்தே உன் கவலையிறக்கி..
சுகமனைத்தையும் உனக்கு சொந்தமாக்கி..

உன் சிந்தனையில் சிறகடித்து
பாரதியின் கண்ணம்மாவாய்
சிம்மாசனமிட்டு...
வெற்றிப்பயணத்திற்கு
மலர்ப்பாதையமைத்து..

மனதின் மனம் அறிந்தவள்

ஐயிரண்டு மாதம்
உன்னுயிரை சுமந்து
உயிரின் உயிரான உயிருக்கு
உயிராக பரிசளிக்க..

நீ என்றும் இன்புற்று...
இறுதிவரை எனைப் பிரியாமல்
இணைந்திருக்க விரும்புகிறேன்..!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__